லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் 469 ரன்கள் குவித்துள்ள நிலையில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 151 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. 318 ரன்கள் பின் தங்கிய நிலையில் தற்போது மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய கவாஸ்கர் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பார்த்தது முற்றிலும் வேறு. டிராவிடும் லக்ஷ்மனும் இணைந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை அப்போது அமைத்தார்கள். இது குறித்து ஜஸ்டின் லாங்கர்க்கு ஞாபகப்படுத்துவதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் டிராவிட்டும், லக்ஷ்மனும் இரண்டு நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்தார்கள்.
அதன் பிறகு இந்திய அணி கடைசி நாளில் ஆஸ்திரேலியாவில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை மனதில் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா இம்முறை ஃபாலோவ் ஆன் தராது என நான் நினைக்கிறேன். அப்படி அவர்கள் வழங்கினால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடும். அந்த திறமை இந்தியர்களுக்கு இருக்கிறது.

சில பந்துகளை கணிக்க தவறி விட்டார்கள். இதனால் தான் சில விக்கெட்டுகள் விழுந்தது. பந்து வெளியே போகிறது என அதை விட்டு அது போல்டானது. கொல்கத்தாவில் நடந்தது போல் இங்கேயும் ரன் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. கடைசி நாளில் பந்து நன்றாக திரும்பினால் ஜடேஜா மேஜிக் செய்ய கூட வாய்ப்பு இருக்கிறது.
முதலில் இந்திய அணி முடிந்தவரை ஆஸ்திரேலியாவின் இலக்கு அருகே செல்ல வேண்டும். 269 ரன்கள் என்ற இலக்கை தாண்டினால் பாலோ ஆன் தவிர்த்து விடலாம். அதன் பிறகு ஆஸ்திரேலிய இலக்கு உடனான தூரத்தை குறைக்க வேண்டும். இதை செய்தால் ஒரு அளவுக்கு ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று கவாஸ்கர் கூறினார்.