மும்பை: இந்திய அணியில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு குறித்து சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
208 ரன்களை குவித்த போதும், இந்திய பவுலர்களால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்திய அணியில் அக்ஷர் பட்டேலை தவிர்த்து மற்ற எந்த பவுலரும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக டெத் ஓவர்களில் சொதப்பி வருவதுதான் கவலையை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய போட்டியில் கூட அவர் 4 ஓவர்களை வீசி 51 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மொஹாலியில் நேற்று எந்தவித பனிப்பொழிவும் இல்லை. எனவே பவுலர்களுக்கு சரியான சூழல் இல்லை என்று காரணம் கூற முடியாது. இந்திய அணிக்கு 19ஆவது ஓவர்தான் தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதுவும் புவி தான் அதனை செய்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் புவனேஷ்வர் குமார், ஒவ்வொரு முறையும் 19வது ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் 19வது ஓவரில் மொத்தம் 18 பந்துகளில் 49 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதாவது ஒரு பந்திற்கு 3 ரன்கள் வீதம் விட்டுக்கொடுக்கிறார். புவியின் அனுபவத்திற்கு இது மிகவும் அதிகம். எனவே மாற்றிக்கொள்ள வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.