லக்னோ: இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளாசுவார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் விராட் கோலி 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் என்று 354 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு சதம் விளாச வாய்ப்பு கிடைத்த நிலையில், சிக்சர் அடிக்க முயற்சித்து 95 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசி இருந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்களில் பட்டியலில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்திருப்பார்.
ஆனால் கையில் கிடைத்த வாய்ப்பை விராட் கோலி தவறவிட்டதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரிலேயே விராட் கோலி 50வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், விராட் கோலி 50வது சதம் அடிக்கும் நாள் மற்றும் இடத்தை கணித்துள்ளார்.
அதாவது நவம்பர் 5ஆம் தேதி விராட் கோலி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் இந்திய அணி கொல்கத்தா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. அன்றைய போட்டியில் நிச்சயம் விராட் கோலி சதம் விளாசுவார் என்று கணித்துள்ளார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், விராட் கோலியின் பிறந்தநாளை கடந்து அவர் 50வது சதம் விளாச வேற சிறந்த நாள் அமைந்துவிடுமா என்ன?
நவ.5ஆம் தேதி முன் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இதனால் 49வது சதம் விளாசுவதற்கு 2 போட்டிகள் உள்ளது. கொல்கத்தா மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகச்சிறந்த மைதானம். அதேபோல் மிகச்சிறந்த ரசிகர்களை கொண்ட மைதானம். அன்றைய நாளில் விராட் கோலி சதம் அடித்தால், ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.