ரோஹித் கோலி மோதல்
2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே சில முடிவுகளில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர், இது பெரிய விவகாரம் என்பது போல பல்வேறு தகவல்கள் வெளியாகின.
நிறைய ஆதாரங்கள்
ரோஹித் சர்மா கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதில் இருந்து அன்பாலோ செய்து விட்டார் என கூறப்பட்டது. தொடர்ந்து ரோஹித் சர்மா தான் அணிக்காக மட்டும் ஆடுவதில்லை. நாட்டுக்காகவும் தான் ஆடுகிறேன் என இணையத்தில் பதிவிட்டு சூசகமாக மோதல் குறித்து கூறினார்.
கோலி மறுப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி பேட்டி அளித்த போது இது எல்லாமே வதந்தி தான். இது போன்ற செய்திகள் வருவது அதிர்ச்சியாக உள்ளது எனக் கூறி இந்த வதந்திகளுக்கு தற்காலிக முடிவுரை எழுதினார்.
ரோஹித் அமைதி
ஆனால், ரோஹித் சர்மா இதுவரை மோதல் செய்திகள் குறித்து நேரடியாக வாய் திறக்கவில்லை. அவரது அமைதிக்கு பின் என்ன இருக்கிறது? என்ற மர்மம் மட்டும் இன்னும் அவிழவில்லை. இந்த நிலையில் கவாஸ்கர் இது குறித்து "ஸ்போர்ட்ஸ்ஸ்டார்" பத்திரிக்கையில் எழுதி உள்ளார்.
கண் சிமிட்டல்
அவர் கூறுகையில், கோலியும், ரோஹித்தும் கூரை மேல் நின்று கூவினாலும் இந்த கதை முடிவுக்கு வராது. ஒவ்வொரு முறை ரோஹித் சர்மா தோற்கும் போதும் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என கண் சிமிட்டல்கள், ஆமாம் என்பது போன்ற தலை ஆட்டல்களை பார்க்கலாம் என்று திகில் கிளப்பி இருக்கிறார்.
மீடியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
ஊடகத்துக்கு இந்த விஷயம் சொர்க்கத்தில் இருந்து கிடைத்த அமிர்தம் போன்றது. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது இது அமுக்கப்படும். போட்டி இல்லாத நாட்களில் இது இஷ்டத்துக்கு வளரும். ரோஹித் சர்மா, கோலி இருவரும் தொழில்முறை வீரர்கள். அவர்கள் தலையை உயர்த்தாமல், இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுப்பார்கள். ஆனால், இந்த கதைகள் 20 ஆண்டுகள் ஆனாலும் நிற்காது என்றார் கவாஸ்கர்.
கவாஸ்கர் முன்பு என்ன சொன்னார்?
இதே கவாஸ்கர் சில நாட்கள் முன்பு உலகக்கோப்பைக்குப் பின் கோலியை எப்படி கேப்டனாக நியமித்தார்கள் என பொங்கினார். அதற்கு கூட்டம் போட்டு விவாதித்து தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என கூறினார். அதற்காக தேர்வுக் குழுவை நகர முடியாத வாத்துக்கள் என மோசமாக திட்டினார்.
மீண்டும் மோதல் பேச்சு
அப்போது மறைமுகமாக மும்பையை சேர்ந்த ரோஹித் சர்மாவை, அதே மும்பையை சேர்ந்த சுனில் கவாஸ்கர் ஆதரித்து கருத்து கூறி உள்ளார் என கருதப்பட்டது. இப்போது எல்லோரும் மறந்து கொண்டிருக்கும் ரோஹித் சர்மா - கோலி மோதல் விவகாரத்தில் உண்மை இல்லை என்பதை கூறியே அதை மீண்டும் நடு கூடத்துக்கு கொண்டு வந்து விட்டுள்ளார் கவாஸ்கர். மறுபடியும் இந்த விவகாரம் தீப்பிடிக்குமா?