லாடர்ஹில், புளோரிடா, அமெரிக்கா: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான சுனில் கவாஸ்கருக்கு அமெரிக்காவில் ஒரு அவமரியாதை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியைக் காண வந்த அவருக்கு மைதானத்திற்குள் நுழைய அமெரிக்க பாதுகாவலர்கள் அனுமதி மறுத்து வெளியிலேயே நிறுத்தி வைத்து விட்டனர்.

கவாஸ்கர் முன்னாள் இந்திய கேப்டன் என்று ரசிகர்கள் பலர் கூறியும் கூட அவர் யாராக இருந்தாலும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று போலீஸார் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
புளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பிராந்திய பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்தப் போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார் கவாஸ்கர். இதற்காக ஸ்டேடியத்திற்கு வந்த அவரை அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் உள்ளே விட மறுத்து நிறுத்தி விட்டனர். இதனால் கவாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பாதுகாவலர்களிடம், இவர் யார் தெரியுமா, இவர்தான் கவாஸ்கர் என்று கூறினர்.
அதைக் கேட்ட பாதுகாவலர்கள், அதனால் என்ன. அவர் யாராக இருந்தாலும் சரி, உள்ளே போக முடியாது. அனுமதி கிடையாது என்று கூறி விட்டனர். இதனால் கவாஸ்கர் ஸ்டேடியத்திற்கு வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
உலகத்திலேயே அமெரிக்கர்களைப் போல "பயந்தாங்கொள்ளிகளை" எங்குமே பார்க்க முடியாது. எதற்கெடுத்தாலும் முன்னெச்சரிக்கை, எதற்கெடுத்தாலும் கிடுக்கிப்பிடியான பாதுகாப்பு என்று பெரும் துயரக்காரர்கள். பாதுகாப்பு விஷயத்தில் அவ்வளவு கெடுபிடியாக இருப்பார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே ஷூவைக் கழற்றச் சொல்லி சோதனை போட்ட கொடுமைக்காரர்கள்தான் அமெரிக்கர்கள் என்பது நினைவிருக்கலாம்.
அமெரிக்காவில் இப்போதுதான் கிரிக்கெட் வளர ஆரம்பித்துள்ளன. எனவே கவாஸ்கர் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறித்து அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். ஆனால் பலரும் எடுத்துக் கூறியும் கூட அதை காதில் வாங்காமல் நீ யாரா இருந்தா எனக்கென்ன என்ற ரீதியில் பாதுகாவலர்கள் பேசியதுதான் கொடுமையானது.
ஸ்டேடியத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தால் கவாஸ்கர் வெளியிலேயே சில நிமிடம் நிற்க வேண்டியதாயிற்று. அப்போது அவரிடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் இந்திய அணியின் பேருந்து வந்து சேர்ந்த பிறகுதான், அவர்களுடன் சேர்ந்து கவாஸ்கரும் ஸ்டேடியத்திற்குள் போக முடிந்தது.