மும்பை : ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது முழு மனதுடன் விளையாட வேண்டுமே தவிர பெயருக்காக விளையாட கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுறுத்தி இருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்விக்கு பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் ஸ்டார் வீரர்கள் அனைவரும் ரஞ்சி போட்டிக்கு திரும்பி விளையாடினர். இதில் ரோகித் சர்மா, காஷ்மீர் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 3 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்களும் எடுத்தார்.

இதை போன்று ஸ்ரேயாஸ் முதல் இன்னிங்சில் 11 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களும் எடுத்தார். இதன் மூலம் காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், "டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் தான் மும்பை அணி ரஞ்சிப் போட்டியில் தோல்வியை தழுவியது".
" பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்தில் வேண்டுமானால் நீங்கள் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கலாம். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். உங்களிடம் நல்ல பேட்டிங் யுக்தி இருந்தால் மட்டுமே உங்களால் ரன்கள் சேர்க்க முடியும். நீங்கள் விளையாடும் விதத்தில் ஆட்டமிழக்க தான் அதிக வாய்ப்பு இருக்கின்றது".
"சிட்னி டெஸ்ட் போட்டியில் கூட நீங்கள் இப்படித்தான் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் ஆட்டம் இழந்தீர்கள். இதே போன்ற ஆடுகளங்களில் விளையாடுவதற்கு கொஞ்சம் அறிவும் பொறுமையும் வேண்டும். ஆக்ரோஷம் நிச்சயம் கை கொடுக்காது. நீங்கள் சிட்னி டெஸ்டில் பொறுமையாக விளையாடிருந்தால் கூட கூடுதலாக ஒரு 50 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் முடிவை மாற்றி இருக்க முடியும்".
"ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஆடிய விதத்தை பார்க்கும் போது நிச்சயம் அவர்கள் முழு மனதோடு தான் விளையாடுகிறார்களா? இல்லை பிசிசிஐ யின் ஒப்பந்தம் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக பெயருக்கு ரஞ்சியில் விளையாடுகிறார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. இது வீரர்களின் மனதுக்கு தான் தெரியும். ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு திரும்புவதற்காக இந்த சீசனில் இரண்டு சதம் அடித்த ஆயுஷ் மாத்ராவை மும்பை அணி நீக்கி இருக்கிறார்கள்".
"எனினும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அந்த இளைஞர் ரோகித் சர்மாவுடன் அதிக நேரத்தை செலவிட்டு அவர்களின் அனுபவத்தை பெற்றிருப்பார் என நான் நம்புகிறேன். வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ள ரஞ்சி போட்டியில் ராகுல், சிராஜ், கோலி விளையாடுவாரா என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.