மும்பை: ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா youtube சேனல் ஒன்றில் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். சமீபகாலமாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் கூறிவரும் நிலையில் ரெய்னா தன்னுடைய கருத்தை முதல்முறையாக வெளிப்படுத்தி இருக்கிறார் .
இது குறித்து பேசிய அவர், "50 ஓவர் உலகக்கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ரோகித் சர்மாவும், விராட் கோரியும் கண்டிப்பாக விளையாட வேண்டும். இந்த இருவரும் தற்போது தான் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தந்து இருக்கிறார்கள்."

"இருவருக்கும் அதிக அளவு அனுபவம் உள்ளது. ரோகித் சர்மா தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என நினைக்கின்றேன். அவர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார் எனினும் தேர்வு குழுவினரின் முடிவே இறுதியாக இருக்கும். ஆனால் நான் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் ரோகித் சர்மாவை கேப்டனாக தொடர வைப்பேன்."
"விராட் கோலி மற்றும் ரோஹித் இருவருமே 50 ஓவர் உலகக் கோப்பையை விளையாட வேண்டும். விராட் கோலி ஏற்கனவே 2011 உலக கோப்பையை வென்று உள்ளார். ரோகித் சர்மா இரண்டு டி20 கோப்பையை வென்றுள்ளார். எனவே தேர்வு குழுவினர் இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என நம்புகிறேன். அடுத்த கேப்டனாக சுப்மன் கில் வரப்போகிறார் என நினைக்கின்றேன்."
"ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் அவர் சாதிப்பார். இதே போன்று இந்திய அணியில் கண்டிப்பாக பண்ட் சேர்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றேன். அவர் விளையாடிய கடைசி ஐபிஎல் போட்டியில் சதம் அடித்தார். அவருக்கு இந்த ஆண்டு கொஞ்சம் நெருக்கடியை கொடுத்தது. எனினும் அதிலிருந்து மீண்டும் அவர் வந்திருக்கின்றார்."
"ஐபிஎல் தொடரில் அவர் எப்போதுமே சிறப்பாக விளையாடுகிறார். அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெயர் அவருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கும். எனினும் அதை அவர் நன்றாகவே எதிர்கொண்டார். அடுத்த சீசனில் பண்ட் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். இந்திய அணி தேர்வு செய்யப்பட்டால், அதில் நிச்சயம் பண்ட் பெயர் இடம் பெற வேண்டும்" என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.