மும்பை: அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் சராசரியாக 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டித்தொடர்களை ஆரம்பித்து தற்போது 7வது சீசன் சென்றுகொண்டுள்ளது. இதில் 7 முறையும் பிளை ஆப் சுற்றுக்கு வந்தது சென்னை. 5 முறை பைனலுக்கு சென்றது மட்டுமின்றி இரண்டு முறை கோப்பையை வென்று அசத்தியது சென்னை. அனைத்து சீசன்களிலும் சீராகவும், சிறப்பாகவும் ஆடும் ஒரே அணி சென்னைதான். மற்ற அணிகள் ஒரு சீசனில் 'ஓஹோ' என ஆடினால் அடுத்த சீசனில் 'அட்டர் பிளாப்'பாகிவிடும்.

சென்னை அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம், சுரேஷ் ரெய்னாதான். டோனியைப்போலவே, ரெய்னாவும் ஆரம்பம் முதல் அனைத்து சீசன்களிலும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். சென்னை அணியைப்போலவே ஐபிஎல்லில் சீராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் ரெய்னா மட்டுமே. 7 ஐபிஎல் சீசன்களிலும் அட்டகாசமாக விளையாடி புது சாதனைகளை படைத்தவண்ணம் உள்ளார்.
ஐபிஎல் வீரர்களிலேயே 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை நடப்பாண்டு தொடரின் தொடக்கத்திலேயே பெற்றார் ரெய்னா. தற்போது அவரின் ஐபிஎல் மொத்த ரன் எண்ணிக்கை 3238. மொத்தம் 114 பந்தையங்களில் ஆடி இந்த ரன்களை அடித்துள்ளார். அடுத்த இடத்தில் இருப்பது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா. இவர், 2903 ரன்களுடன் உள்ளார். மூன்றாம் இடம் கொல்கத்தாவின் கம்பீருக்கு. இவர் மொத்தம் 2783 ரன்களை விளாசியுள்ளார்.
ரெய்னா இதுவரை 23 அரை சதங்கள் அடித்து, அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கம்பீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் 7 சீசனிலும் சராசரியாக 400 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் சுரேஷ் ரெய்னா பதிவு செய்து, சென்னை ரசிகர்களின் செல்லக்குட்டியாக மாறியுள்ளார்.