'எங்கள் உயிர் நட்புக்கு ஐபிஎல் முக்கிய காரணம்' - தோனி குறித்து ரெய்னா உருக்கம்
மும்பை: கிரிக்கெட்டை தாண்டி தோனி - ரெய்னாவின் நட்பு எவ்வளவு பெரியது என்று அறியாத ரசிகர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த நட்பிற்கான ஜஸ்ட் சாம்பிள் இந்த செய்தி.
ஐபிஎல் தொடர் முதன்முதலாக 2008ல் தொடங்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. தோனி 'தல' என்றால், இவர் 'சின்ன தல'. இப்படி தமிழக ரசிகர்களுடன் ஏகத்துக்கும் கனெக்ட் ஆகியிருந்தார்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒன் டவுன் இறங்கி விட்டு விளாசுவதே இவரது ஸ்டைல். தேவைப்படும் நேரத்தில் கட்டை போடவும் தெரியும், முக்கியமான நேரத்தில் கியரை மாற்றவும் தெரியும். ஒரு நேர்த்தியை பேட்ஸ்மேன் என்றால் மிகையாகாது.

ரசிகர்களுடன் கனெக்ட்
ஒவ்வொரு சீசன் போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெறுகிறதோ, இல்லையோ, மற்ற வீரர்கள் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக விளையாடுகிறார்களோ தெரியாது... ஆனால், ரெய்னாவிடம் ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் அதே உற்சாகத்தை காணலாம். விக்கெட் எடுக்கும் பவுலர் கூட அவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்கமாட்டார், ஆனால் இவர் கிரவுண்டில் எங்கு இருந்தாலும், துள்ளிக் குதித்து ஓடி வந்து, சக வீரர்களுடன் விக்கெட்டை கொண்டாடுவார். அது தான் ரசிகர்களை அவருடன் எளிதில் கனெக்ட் செய்த விஷயம்.

ஃபீல்டிங்கில் கில்லி
குறிப்பாக, தோனி வாக்கே இவருக்கு வேதவாக்கு. கேப்டன் தோனி என்ன எதிரோபார்க்கிறாரோ அதை கச்சிதமாக நிறைவேற்றுவதில் கில்லாடி. பேட்ஸ்மேன் ரெய்னாவாக மட்டுமல்ல, பவுலர் ரெய்னாவாகவும் இவர் அணிக்கு அளித்த பங்களிப்பு ஏராளம். பெற்ற வெற்றிகளும் ஏராளம். ஃபீல்டிங்கில் செல்லவே தேவையில்லை, சார் கில்லி.

சேர்ந்து ஓய்வு
கிட்டத்தட்ட தோனியை ஒரு மூத்த அண்ணனாகவே பாவித்து வந்த ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தவுடன் தானும் ஓய்வு பெறுவதாக உடனடியாக அறிவித்து, தனது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார். அவர் நினைத்திருந்தாலும், இன்னும் 6 ஆண்டுகளாவது விளையாடி இருக்க முடியும். ஆனால், தோனியுடன் சேர்ந்து அவரும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தோனி தான் சொன்னார்
இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தான் முதன் முதலாக எடுக்கப்பட்ட தருணங்களை ரெய்னா நினைவு கூர்ந்துள்ளார். தான் எழுதியுள்ள 'Believe' சுயசரிதை புத்தகத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார். அதில், "ஐபிஎல் ஏலம் தொடங்கியது. நாட்டில் உள்ள மற்ற வீரர்களை போல, நானும் எந்த அணிக்கு தேர்வாகாப் போகிறோம் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எனினும், நான் சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடவே விரும்பினேன். காரணம், தோனியுடன் இணைந்து ஒரே அணியில் விளையாட விரும்பினேன். பிறகு, நான் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதை தோனி சொல்லக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

சிஎஸ்கே காரணம்
அந்த மகிழ்ச்சியான நாளை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். மேத்யூ ஹெய்டன், முரளிதரன், ஸ்டீபன் பிளமிங் போன்ற வீரர்களை சிஎஸ்கே வாங்கியிருந்தது. அப்படிப்பட்ட அணியில் நானும் விளையாடினேன். ஐபிஎல், தோனியுடனான எனது உறவை மேலும் பலப்படுத்தியது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications