
அதிரடி ஆட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் மனதையும் வென்றார். முக்கியமான போட்டிகளில் டாப் ஆர்டர் மிக வேகமாக சரிந்த போதெல்லாம், தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி பல முறை இந்திய அணியை காப்பாற்றியுள்ளது. தோனியின் மனநிலையை புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படும் வீரர் என்றே சுரேஷ் ரெய்னாவை கூறலாம்.

தோனி - ரெய்னா
இந்திய அணியில் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னராகவும் பல முறை சுரேஷ் ரெய்னா உதவி செய்துள்ளார். ஆனால் சில ஆண்டுகளாக இந்திய ஆணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் கடந்தாண்டு தோனியுடன் சேர்ந்து தனது ஓய்வு அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். எனினும் ஐபிஎல் தொடரில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

ரெய்னா நெகிழ்ச்சி
இந்நிலையில் தோனியுடனான தனது மறக்கமுடியாத சம்பவங்களை ரெய்னா பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2007ம் ஆண்டு எனக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது தோனி என்னிடம், அறுவைசிகிச்சை செய்துக்கொள்ளும் வயது உங்களுக்கு இல்லை. சற்று பொறுமையாக ஓய்வு எடுங்கள் எனக்கூறினார். அப்போது அவர் கேப்டன் கூட கிடையாது. இருப்பினும் எனக்காக தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தினார்.

தோனி காட்டிய அக்கறை
அந்த அறுவைசிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நான் விளையாடாமல் இருந்தேன். ஆனால் தோனி 2 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரிப்பார். மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என கேட்டுத் தெரிந்துக் கொள்வார். ஒரு வீரராக, சகோதரராக என் உடல்நிலை குறித்து தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடியவர். அதுதான் எனக்கு மிகவும் தூண்டுகோலாக இருந்தது. அதன் பிறகு விரைந்து குணமடைந்து இந்தியாவுக்காக விளையாடினேன் என ரெய்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











