மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் ஏன் 5 முறை சாம்பியன் என்பதை இன்று நிரூபித்து இருக்கிறார்கள். ஆர்சிபி அணியை பந்தாடியதன் மூலம் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ், தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 1 ரன்னிலும், ராவத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த டுபிளசிஸ், மேக்ஸ்வேல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். 41 பந்துகளில் டுபிளசிஸ் 65 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல் 33 பந்தில் 68 ரன்கள் விளாசினார். இருவரும் முக்கிய கட்டத்தில் வெளியேற, கடைசி 7 ஓவரில் மும்பை அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி, 199 ரன்களில் கட்டுப்படுத்தினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் பட்டையை கிளப்பினார். 4 சிக்சர், 4 பவுண்டரி என விளாசிய அவர் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார். இதனையடுத்து அவர் வெளியேறியதும், ஆர்சிபி வென்றுவிடும் என நினைத்த ரசிகர்களின் எண்ணத்தை பெட்ரோல் போட்டு எறித்தார் சூர்யகுமார்.
தனது பழைய அதிரடியை வெளிப்படுத்திய சூர்யகுமார், 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்களும், 7 பவிண்டரிகளும் அடங்கும். அதே போன்று அவருக்கு துணையாக நின்ற நேஹல் வாத்தேரா 34 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 16.3வது ஓவரில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.