டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் விளையாட, தடை விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்த அணியால் அப்படியே அடுத்த சீசனிலும் ஆட முடியும். அதற்கு ஒரு சில நடவடிக்கைகள் எடுத்தால் போதும்.
சுப்ரீம்கோர்ட் நியமித்த நீதிபதி லோதா கமிட்டி, ஐபிஎல் விளையாட்டில் ஊழல் நடந்துள்ளதையும், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளராக இருந்த ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதையும் உறுதி செய்தது. இதன் காரணமாக, சென்னை அணியின் உரிமையை வைத்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும், ராஜஸ்தானின் தற்போதைய உரிமையாளரும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தங்களது அணியை ஐபிஎல் போட்டிகளில் ஆட வைக்க முடியாது என்று லோதா குழு தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பில்லை என்பதால், அவர்களை தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் கூறியுள்ளது. எனவே, ஐபிஎல் அடுத்த சீசனிலும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆட ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது.
எப்படியென்றால், இவ்விரு அணிகளையும், வேறு ஒருவர் விலை கொடுத்து வாங்கினால் அது சாத்தியப்படும். அப்படி வாங்கும்போது, தற்போதுள்ள பெயர்களிலேயே அணியால் ஆட முடியாது. வேறு பெயர் மாற்றப்பட வேண்டும். எப்படியும் 8 அணிகள் பங்கேற்றால்தான் ஐபிஎல் களைகட்டும் என்பதால், இவ்விரு ஆண்டுகளுக்கும், தற்காலிகமாவது யாராவது விலை கொடுத்து வாங்க வாய்ப்புள்ளது. புதிய அணியை உருவாக்குவதை விட இதுவே எளிதான வழி.
அவ்வாறு வேறு உரிமையாளர் அணியை வாங்கி, வேறு பெயர் சூட்டிவிட்டால், அடுத்த வருட ஐபிஎல்லில் சென்னை அணி ரசிகர்கள் மறுபடியும் விசில் போட முடியும். இந்த சூழ்நிலையில், பிசிசிஐயின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இதுவரை பிசிசிஐ எந்த கருத்தையும் சொல்லவில்லை.