பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின் அரை இறுதியில் போட்டியிடும் வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.
தனது முதல் சூப்பர் 8 போட்டியில்ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வியைச் சந்தித்த இந்தியா நேற்று 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் போராடித் தோற்றுப் போனது.
ஆனால் இந்தப் போராட்டத்தை இந்தியா தவிர்த்திருக்கலாம்- அதன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மட்டும் சிறப்பாக இருந்திருந்தார்.
வழக்கம் போல டாஸ் வென்ற கேப்டன் டோணி மேற்கு இந்தியத்தீவுகளை முதலில் பேட் செய்யப் பணித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லும், சந்தர்பாலும் இணைந்து நிதானமாக ரன் குவிக்க ஆரம்பித்தனர். சந்தர்பாலை விட கெய்ல் அமர்க்களமாக ஆடினார். இந்தியப் பந்து வீச்சாளர்கள் அவரை எந்த வகையிலும் டிஸ்டர்ப் செய்யவே இல்லை.
வந்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்குமாக விளாசினார். 66 பந்துகளைச் சந்தித்த கெய்ல் சிறப்பாக ஆடி 98 ரன்கள் குவித்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி விட்டார்.
மறு முனையில் விளையாடிய வீரர்கள் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. அதிகபட்சமாக சந்தர்பால் 23 ரன்கள் எடுத்தார். சமி 10 பந்துகளில் 19 ரன்களை குவித்தார். போலார்ட் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
இந்திய பந்து வீச்சு மகா சோம்பலாக இருந்தது. அதை விட பீல்டிங் மகா மோசம். அழகான கேட்ச்வாய்ப்புகளை இந்தியர்கள் தவற விட்டனர். குறிப்பாக மிக எளிதாக பிடித்திருக்க வேண்டிய ஒரு கேட்ச்சை டோணியும், யூசுப் பதானும் தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் மோதி கோட்டை விட்டனர்.
அதேபோல ரவீந்திர ஜடேஜாவின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. மிகப் பெரிய ஸ்கோரை நோக்கி மேற்கு இந்தியத்தீவுகள் போய்க் கொண்டிருந்த நிலையில் கடைசி ஓவரில் ஆசிஷ் நெஹ்ராவின் நேர்த்தியான பந்து வீச்சு காரணமாக கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்கள் வீழ்ந்ததால், ஸ்கோர் 169 ரன்களுடன் நின்று போனது.
இதை இந்தியா எளிதாக சேஸ் செய்து விடும் என்ற ரசிகர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைப்பது போல அமைந்தது மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சு.
ஷாட் பிட்ச் ஆக பந்து போட்டால் இந்தியர்கள் திணறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்த மேற்கு இந்தியத் தீவு பந்து வீச்சாளர்கள் அதே போல போட்டு முரளி விஜய் மற்றும் கம்பீரை வேகமாக பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.
விஜய் 7 ரன்களும், கம்பீர் 15 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னாவும், ரோஹித் சர்மாவும் ஸ்திரப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் 5 ரன்கள் எடுத்திருந்தபோது போலார்ட் பந்தில், விக்கெட் கீப்பர் திணேஷ் ராம் தின்னிடம் கேட்ச் ஆனார் ரோஹித். ஆனால் இந்த அவட்டை ஏற்க மறுத்து நடுவரிடம் அவர் முறையிட்டார். இதனால் லேசான பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் இணைந்தனர். இந்த ஜோடியும் நீண்டநேரம் நிற்கவில்லை. யுவராஜ் சிங் 12 ரன்களில் கிளம்பினார்.
சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் கேப்டன் டோணி அதிரடியாக ஆடவே ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
18 பந்துகளைச் சந்தித்த டோணி 29 ரன்களைக் குவித்தார். மறு முனையில் பதான் 10 பந்துகளில் 17, ஹர்பஜன் 10 பந்துகளில் 14 ரன்களைக் குவித்தனர்.
டோணி இருந்த வரை நிலவிய நம்பிக்கை அவர் ஆட்டமிழந்தவுடன் பறிபோய் விட்டது. தேவையே இல்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார் டோணி.
இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா.
14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் தோல்வியைச சந்தித்துள்ள இந்தியா, அரைஇறுதிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட தவற விட்டுள்ளது.
ஒரே ஒரு வாய்ப்பு
இருப்பினும் இந்தியாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது ஆஸ்திரேலியா அணி தனது இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அதாவது இலங்கை மற்றும் மேற்கு இந்தியத்தீவுகளை அதுதோற்கடிக்க வேண்டும். அதில் இலங்கையை நேற்று புரட்டிப் போட்டு வென்று விட்டது ஆஸ்திரேலியா. அடுத்து மேற்கு இந்தியத்தீவுகளையும் அது வெல்ல வேண்டும்.
அதேபோல இந்தியா தனது கடைசிப் போட்டியில் இலங்கையை நல்ல ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.
இது நடந்தால் முதலிடத்தைப் பிடிக்கும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குப் போய் விடும். ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முன்னணிக்கு வந்தால் 2வது இடத்தைப் பிடித்து அரை இறுதிக்குப் போகலாம்.