சட்டையைக் கழட்டு கொண்டாடு... பொங்கிப் பெருகிய மேற்கு இந்திய உற்சாகம்!
சென்னை: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளதா அல்லது இந்தியா வென்றுள்ளதா என்று ஒரு நிமிடம் சந்தேகம் வரும் அளவுக்கு நேற்றைய இரவு காணப்பட்டது. காரணம், கிட்டத்தட்ட இந்தியாவே சேரந்து நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றதை கொண்டாடிக் குதூகலித்தது.
பேஸ்புக், டிவிட்டர் என எங்கு பார்த்தாலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குப் புகழாரங்கள் குவிந்து கொண்டிருந்தன. பிராத்வெயிட்டையும், சாமுவேல்ஸையும் புகழ்ந்து ஸ்டேட்டஸ்கள் பறந்து கொண்டிருந்தன.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரும் கூட வெறித்தனமான உற்சாகத்துடன் மைதானத்தை கலக்கி விட்டனர்.

பிராத்வெயிட் புயலுக்குப் பிறகு
நேற்றைய இறுதிப் போட்டியில் பிராத்வெயிட் சரமாரியாக விளாசிய 4 சிக்ஸருக்குப் பிறகு கொண்டாட்டங்கள் பீறிட்டுப் பாய்ந்தன. அணி வீரர்கள் அத்தனை பேரும் மைதானத்திற்குள் பாய்ந்தோடி வந்தனர்.

சட்டையைக் கழட்டு கொண்டாடு
கேப்டன் சமி, ரஸ்ஸல் உள்ளிட்ட பல வீரர்கள் தங்களது ஜெர்சியைக் கழற்றி விட்டு மைதானத்தை வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களுடன் மகளிர் மணியைச் சேர்ந்த சில வீராங்கனைகளையும் காண முடிந்தது.

கங்குலி தாக்கமோ!
இப்படித்தான் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றபோது அப்போது கேப்டனாக இருந்த கங்குலி சட்டையைக் கழற்றி கையில் பிடித்து ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒருவேளை நேற்று போட்டி நடந்தது கொல்கத்தா மைதானம் என்பதால் கங்குலியின் தாக்கம் மேற்கு இந்தியத் தீவுகளையும் தொற்றிக் கொண்டு விட்டதோ என்று தோன்றியது.

இந்தியர்களுக்கும் கொண்டாட்டம்
இந்திய ரசிகர்களும் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். நம்மைத் தோற்கடித்த அணி என்ற சோகம் கொஞ்சம் கூட நமது ரசிகர்களிடம் இல்லை. மாறாக, நாமே வென்றதாக நினைத்து குதுகலித்து மகிழ்ந்தனர்.

வெள்ளைக்காரனை வெளுத்துட்டாங்க
அதிலும் பேஸ்புக்கில் ஒருவர், வெள்ளைக்காரனை வெளுத்துட்டாங்க என்று போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அந்த அளவுக்கு மேற்கு இந்தியத் தீவுகளின் வெற்றி இந்திய ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது.


Click it and Unblock the Notifications