
உத்வேகம்
கிறிஸ் கெயில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் ஆட்டத்தில் தோற்ற இந்திய அணி, அதைத் தொடர்ந்து சரிவில் இருந்து மீண்டு வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே உத்வேகம் அவர்களிடம் இருக்கும். எனவே அரைஇறுதிக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவுக்கு வாய்ப்பு
இந்திய அணியில் ஏகப்பட்ட மேட்ச் வின்னர்கள் உள்ளனர். எல்லா திறமையும் கொண்ட அணியாக இந்தியா விளங்குகிறது. பீல்டிங்கிலும் துடிப்பாக உள்ளது. எனவே கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது.

அப்போதே சொன்னேன்
விராட் கோஹ்லி தனி நபராக இரண்டு ஆட்டங்களில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். உலகின் சிறந்த வீரராக விராட் கோஹ்லி உருவெடுப்பார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தேன். அது இன்று நிரூபணம் ஆகியுள்ளது.

விராட் மட்டுமே அல்ல
விராட் கோஹ்லியை மட்டுமே நாங்கள் குறி வைத்து வியூகம் வகுக்கப் போவதில்லை. இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு வீரரும், திடீரென விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. இந்திய அணியில் திறமையான பேட்டிங் லைன் உள்ளது.

அதிர்ச்சியளிப்போம்
இந்தியாவை போலவே எங்கள் அணியிலும் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு அதிர்ச்சியளிக்க வெஸ்ட் இண்டீஸ் தயாராக உள்ளது. விராட் கோஹ்லி எங்களுக்கு எதிராக அதிக ரன் அடிக்க கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

அஸ்வின் அபாயம்
டோணி கணிக்க முடியாத கேப்டன். முதல் ஓவரிலேயே எனக்கு எதிராக அஸ்வினை பந்து வீச அழைத்தாலும் அழைப்பார். நான் எதற்கும் தயாராக பயிற்சி எடுத்துள்ளேன். பந்து வீச்சாளர் யார் என்று நான் பார்ப்பதில்லை. எவ்வளவு பலம் கொண்டு பந்தை அடிக்க முடியும் என்று மட்டும்தான் பார்ப்பேன்.

அது ஒரு கெட்ட கனவு
20 ஓவர் கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும். அப்படித்தான் ஆப்கானிஸ்தான் கடைசி லீக்கில் எங்களை வீழ்த்தியது. அதையே நினைத்துக்கொண்டிருக்காமல், அடுத்த போட்டிக்கு நாங்கள் தயாராகியுள்ளோம். இவ்வாறு கிறிஸ் கெயில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications