டிராவிட்டின் பிடிவாதம்.. கே.எல்.ராகுலின் ஒரே ஒரு செயல்.. இந்தியாவின் வெற்றியே இதனால் தான் - விவரம்
அடிலெய்ட்: ராகுல் டிராவிட் போட்ட கணக்கு என்றுமே தவறாகாது என்பது வங்கதேசத்துடனான போட்டியில் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கடைசி ஓவரில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணிக்கு மழையின் காரணமாக 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில் 151 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணி 145 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

குவியும் விமர்சனங்கள்
இந்த போட்டியில் 44 பந்துகளில் 66 ரன்களை குவித்த விராட் கோலி தான் ஆட்ட நாயகன் விருது வென்றார். எனினும் ஆட்டத்தின் உண்மையான நாயகன் கே.எல்.ராகுலாக தான் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் டிராவிட்டின் பிடிவாதம் தான். டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியது முதலே கே.எல்.ராகுல் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன் நடந்த 3 லீக் போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

டிராவிட்டின் பிடிவாதம்
ஃபார்ம் அவுட்டாகியுள்ள கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு தர வேண்டும் என ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கினார். இதற்கு நிர்வாகம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் ராகுல் டிராவிட் பிடிவாதமாக இருந்துவிட்டார். ராகுலிடம் திறமை உள்ளதாகவும், அவர் நிச்சயம் கம்பேக் தருவார் எனவும் தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருந்தார். மேலும் அவரின் கம்பேக்கிற்காக ஸ்பெஷல் போட்டி நடத்தப்பட்டது.

கே.எல்.ராகுல் கம்பேக்
டிராவிட்டின் நம்பிக்கைக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. முக்கியமான போட்டியான இன்று ராகுல் முதல் பந்தில் இருந்தே அதிரடியை தொடங்கினார். 32 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 50 ரன்களை விளாசினார். இதனால் இந்தியாவுக்கு அட்டகாசமான அடித்தளம் கிடைத்தது. இதுமட்டுமல்லாமல் ராகுல் செய்த ஒரு விஷயம் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்
16 ஓவர்களில் 151 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியில் ஓப்பனிங் ஜோடியே அச்சுறுத்தல் கொடுத்தது. லிண்டன் தாஸ் 27 பந்துகளில் (60), ஷாண்டோ 21 ரன்களை குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் 7 ஓவர்களில் அந்த அணி 68 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் ஆடி வந்தது. ஆனால் அப்போது திருப்புமுணையை கொடுத்தார் கே.எல்.ராகுல்.

அப்படி என்ன நடந்தது
8வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை ஷாண்டோ அடித்துவிட்டு ஓட, 38 மீட்டர் தூரத்தில் கே.எல்.ராகுல் கைக்கு சென்றது. அப்போது மிகவும் வேகமாக செயல்பட்ட கே.எல்.ராகுல் அவ்வளவு தூரத்தில் இருந்து துல்லியமாக ஸ்டம்பிங் செய்தார். இதனால் லிண்டன் தாஸ் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் தான் இந்தியா எழுச்சி கண்டது.


Click it and Unblock the Notifications