
ப்ளேயிங் 11 உறுதி
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தற்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோகித் சர்மா இன்று அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த அவர், முக்கியமான போட்டிகளில் கடைசி நேரத்தில் அணி வீரர்களிடம், நீங்கள் விளையாடப்போகிறீர்கள் எனக்கூறுவது சரியாக இருக்காது. எனவே அணி வீரர்களிடம் முன்கூட்டியே அறிவித்தால் அதற்கேற்ப அவர்கள் தயாராகி கொள்வார்கள்.

வீரர்கள் தயார்
நாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்கள் தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர். 23ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் போட்டிக்குள் அனைவரும் மனதளவில் உறுதியாகிவிடுவார்கள். எங்களுக்கு எந்தவித பதற்றமும் கிடையாது. சகஜமாக குடும்பத்தினரை பற்றி தான் நாங்கள் பேசி வருகிறோம் என ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.

குழம்பும் ரசிகர்கள்
இந்நிலையில் இதில் தான் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ள முகமது ஷமி இன்னும் ஒரு டி20 போட்டியில் கூட ஆடவில்லை. அவரின் ஃபார்ம் குறித்தும் இன்னும் தெரியாத சூழலில் எப்படி ப்ளேயிங் 11-ஐ உறுதி செய்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை பாகிஸ்தானுடனான போட்டியில் ஷமியை சேர்க்கவில்லையோ எனவும் சந்தேகம் எழுகிறது. இதற்கு காரணம் ரோகித்தின் மற்றொரு கருத்து தான்.

எது உண்மை
முகமது ஷமியின் செயல்பாடுகளை நான் இன்னும் பார்க்கவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி முகாமில் தான் அவரை பரிசோதிக்கவுள்ளோம். அதனை பொறுத்து தான் எங்களின் முடிவுகள் இருக்கும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இதனால் ரோகித் கூறியதில் எது உண்மை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications