கராச்சி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளில் பல கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும், சமீபத்தில் அவரது சகோதரர் அவருக்கு ஆடி ஈ - டிரான் என்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசளித்திருப்பது குறித்து பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் முபாஷிர் லுக்மான் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வரும் நிலையில் பாபர் அசாம் சொத்து மதிப்பு ஏறி வருவதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இத்தனை சொத்துக்கள் பாபர் அசாமுக்கு எப்படி வந்தது? அவர் மேட்ச் பிக்ஸிங்-இல் ஈடுபடுகிறாரா? அவர் சகோதரர் மூலமாக அவருக்கு யாரோ அந்த காரை பரிசு அளித்து இருக்கலாம் என பத்திரிக்கையாளர் முபாஷிர் லுக்மான் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார். அவர் ஆதாரத்தை அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவரை எச்சரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குருப் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தன் நண்பர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு வழங்கி வருவதாகவும், அவரது விளம்பரம் மற்றும் சமூக வலைத்தள விவகாரங்களை கவனித்து வரும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சில பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் இடம் அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அணி கடந்த ஓர் ஆண்டாக 2023 ஆசிய கோப்பை, 2023 ஒரு நாள் போட்டி உலக கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. இந்த நிலையில் முபாஷிர் பாபர் அசாம் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருகிறாரா? என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. மறுபுறம் பாபர் அசாமின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. இது இரண்டையும் முடிச்சு போட்டு பார்த்தால் அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளது என அவர் கூறியிருக்கிறார். அவரது சகோதரர் அவருக்கு ஆடி காரை பரிசளித்திருக்கிறார். அதன் மதிப்பு மட்டுமே ஒரு கோடி ரூபாய் ஆகும். அவரது சகோதரருக்கு ஏது அவ்வளவு பணம்? அப்படி என்றால் யாரோ ஒருவர் அவரது சகோதரர் மூலம் அந்த காரை பாபர் அசாமுக்கு பரிசளித்து இருக்கிறாரா? என அந்த பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
11 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருக்காங்க.. என்னை மட்டுமே குறை சொல்றீங்க.. கோபமான பாபர் அசாம்!
இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரிக்கெட் போட்டி சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மேட்ச் பிக்ஸிங் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எங்களால் ஏற்கவே முடியாது. இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்கள் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். ஆதாரங்களை அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர்த்து பாபர் அசாம் தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.