ராஜ்கோட் : ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார்.
செளராஷ்டிரா சங்க கிரிக்கெட் மைதானம் என்று அழைக்கப்பட்டு வந்த ராஜ்கோட் மைதானம், நிரஞ்சன் ஷா மைதானம் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், தேர்வு குழுவினர், பயிற்சியாளர்கள் குழு, பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பல்வேறு குழப்பங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று உறுதி செய்துள்ளார். இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகம் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினருடன் ஆலோசித்த எடுத்து முடிவு என்றும் ஜெய் ஷா கூறியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேப்டன்சி குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
அதேபோல் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் குறித்தும் ஜெய் ஷா கூறியுள்ளார். அதில், உலகக்கோப்பை தொடருக்கு பின் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் ராகுல் டிராவிட்டை சந்திக்க முடியவில்லை. அவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிக் கொள்கிறேன். ஆனால் அவர் தான் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சியாளர் என்று உறுதி செய்துள்ளார்.
இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் முடிவை பொறுத்தே ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பதிலளித்த ஜெய் ஷா, டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி இருப்பாரா என்பதை பற்றி பிறகு பேசலாம்.

ஆனால் 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் இருந்துமுழுமையாக விடுப்பு கோரியுள்ளார். அது அவரின் உரிமை என்று நினைக்கிறேன். சாதாரண காரணங்களுக்கான முக்கியமான கிரிக்கெட் தொடரில் இருந்து விடுமுறை கேட்கும் வீரரல்ல விராட் கோலி. அதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகளில் விராட் கோலி விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்த ஜெய் ஷாவின் பதில் அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விராட் கோலி விரைந்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.