மும்பை : டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு குழப்பம் மிகுந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்ய கேப்டன் ரோகித் சர்மாவும் தேர்வு குழு தலைவருமான அஜித் அகார்கரும் விரும்பவில்லை என்றும் பிசிசிஐயிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தான் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதாகும் தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக டானிக் ஜகரன் என்ற இந்தி செய்தித்தளத்தில், ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடததால் அவரை தேர்வு செய்ய ரோகித் சர்மாவும் ,அஜித் அகார்கரும் விரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சிவம் துபே போன்ற மாற்று வீரர்களை பயன்படுத்த ரோகித் விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் பிசிசிஐ யில் உள்ள மூத்த நிர்வாகிகள் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும் செய்தி குறிப்பிட்டு இருக்கிறது.
இதனால் கடுப்பான ரோகித் சர்மா டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
ஹர்ஜித் பாண்டியா இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக இருந்தாலும், நடப்பு சீசனில் அவர் 13 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 200 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 144 என்ற அளவில் இருக்கிறது.மேலும் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய எக்கனாமி 10.5 என்ற அளவில் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதால், ரோகித் சர்மாவும் கடுப்பில் இருக்கின்றார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டாலும் பிளேயிங் லெவனின் அவருக்கு இடம் கொடுப்பது என்பது ரோகித் சர்மாவின் முடிவுதான் என்று தெரிகிறது.
ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே ரோகித் அணியில் சேர்க்காமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் நடு வரிசையில் சிவம் துபேக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஜடேஜா உடன் கூடுதலாக அக்சர் பட்டேல் என இரண்டாவது சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டரை சேர்க்க ரோகித் சர்மா ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. இப்படி நடந்தால் ஹர்திக் பாண்டியா பெஞ்சில் அமர அதிக வாய்ப்புள்ளது.