மும்பை : தோனி, விராட் கோலிக்கு கேப்டன்சியில் விளையாடியுள்ளதால், மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாடுவது பெரிய விஷயமல்ல என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் வீரராக விளையாடி வருகிறார். மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மும்பை அணியில் புதிய கேப்டனுக்கு கீழ் விளையாடிய அனுபவம் குறித்த கேள்விக்கு, இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ஏற்கனவே பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன்.
அதனால் கேப்டனாக இல்லாமல் வீரராக விளையாடுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. நம்மிடம் இருந்து அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ, அதனை சிறப்பாக செய்ய வேண்டும். அதனை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறப்பாக செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது ரோகித் சர்மா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய அணியில் தோனி, விராட் கோலி, ரஹானே ஆகியோருக்கு கீழ் ரோகித் சர்மா விளையாடி இருக்கிறார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு கீழும் ரோகித் சர்மா விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.