மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி மே 1ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் போட்டி தொடங்கவுள்ளது. டி20உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.

இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்து அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளது. அதேபோல் ஜூன் 12ஆம் தேதி இந்தியா - அமெரிக்கா அணிகள் விளையாடும் போட்டியும், ஜூன் 15ஆம் தேதி ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டியில் இந்தியா - கனடா அணிகளும் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிப்பில் ஐசிசி தரப்பில் சில விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 20 நாடுகளும் மே 1ஆம் தேதிக்குள் அணி தேர்வை முடித்து அறிவிக்க வேண்டும். அதேபோல் அணிகளில் மாற்றங்கள் செய்ய மே 25ஆம் தேதி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட அணியையே தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிக்கும் 2 பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. மே 1ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உச்சத்தில் இருக்கும் என்பதால், இந்திய அணி தேர்வு குழு எப்படி வீரர்களை தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் ஆடிய அணியில் இருந்து வீரர்களின் தேர்வு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.