நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதனால் 20 அணிகளும் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு, அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த குரூப் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான ஆட்டம் அமெரிக்காவில் நடக்கவுள்ளதால் அந்நாட்டு ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் விராட் கோலி புகைப்படத்தை கொண்டு விளம்பரப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலையில் குறைந்தபட்சமாக ரூ.497ஆகவும், அதிகபட்சமாக ரூ.33,188 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், இணையதளங்கள் மூலமாக மறுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இணையதளங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அதன்படி டிக்கெட்டுகளின் விலை ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 41 லட்சம் முதல் ரூ.1.86 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யபட்டு வருகின்றன. அமெரிக்காவில் என்பிஏ தொடரின் போட்டிகளுக்கான டிக்கெட்டின் விலை ரூ.7.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மறுவிற்பனை இணையதளங்கள் விற்பனை செய்து வருகின்றன. இதனால் டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிக்கெட்டுகள் மூலம் மறுவிற்பனை இணையதளங்கள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.