சென்னை : 2007 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் விளையாடி வரும் ஒரே இந்திய வீரரான ரோகித் சர்மாவின் டி20 உலகக்கோப்பை பயணத்தை பார்க்கலாம்.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் ஜூன் 1ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை வரை 9 டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா தான். இதுவரை மொத்தமாக 36 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 963 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார்.

ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணத்தில் 2007 டி20 உலகக்கோப்பை தான் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரோகித் சர்மா ஒரு அரைசதம் உட்பட 88 ரன்களை விளாசினார். அதிலும் இறுதிப்போட்டியில் கடைசி நேரத்தில் வந்த ரோகித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஆனால் 2009 டி20 உலகக்கோப்பை தொடர் ரோகித் சர்மாவுக்கு சிறப்பாக அமையவில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். தொடர்ந்து 2010 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 46 பந்துகளில் 79 ரன்களை விளாசியது மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக அமைந்தது.
ஆனால் ரோகித் சர்மாவுக்கு ஒரு பேட்ஸ்மேனாக 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது. 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 200 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் 2016ஆம் ஆண்டும் ரோகித் சர்மாவின் பேட்டில் இருந்து 2 அரைசதங்கள் வந்தன. ஆனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதன்பின் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுக்கும், இந்திய அணிக்கும் மோசமான தொடராகவே அமைந்தது. தொடர்ந்து 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் பதவி ரோகித் சர்மாவின் கைகளுக்கு வந்தது. இந்த சீசனில் இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்ற ரோகித் சர்மா, பேட்டிங்கில் 6 போட்டிகளில் விளையாடி 116 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இந்த நிலையில் 37 வயதாகும் ரோகித் சர்மா கடைசி முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். இதனால் 14 மாதங்களாக டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகிய போதும், மீண்டும் ஜனவரி மாதம் முதலே இந்திய டி20 அணியில் இடம்பிடித்து பேட்டிங் ஃபார்மை நிரூபித்துள்ளார். நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடப்பதால், ரோகித் சர்மாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் முடிவடைந்த உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை வென்று அந்த தோல்விக்கு மருந்து போட ரோகித் சர்மா தீவிரமாக இருக்கிறார். ஐசிசி தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரோகித் சம்ரா, இம்முறை பேட்டிங்கிலும் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.