மும்பை : டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் போன்ற வீரர்களால் இந்திய அணிக்கு ஒரு கையே உடைந்து விட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்திருக்கிறார்.டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது பல விதமான மாற்றத்தை சந்தித்து வருகிறது.
ஒரு காலத்தில் 160 ரன்கள் அடித்தால் கூட போதும் என்ற நிலை இருந்தபோது, தற்போது 200 ரன்கள் மேல் அடித்தால் கூட வெற்றி நிச்சயம் இல்லை என்று மாறிவிட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் போல் இம்பாக்ட் பிளேயர் என்ற விதி சர்வதேச கிரிக்கெட்டில் கிடையாது.

இதனால் இந்திய அணி ஆல்ரவுண்டர்களை நம்பி தான் களமிறங்க வேண்டியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், தற்போது டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் இரண்டு வழியில் தான் அணியை தேர்வு செய்ய முடியும். ஒரு வழியில் ஆறு பவுலர்கள் தேர்வு செய்யலாம். இதன் மூலம் அக்சர் பட்டேலை சேர்த்துக் கொண்டு இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தவும் செய்யலாம்.
அடுத்த வழியில் நீங்கள் நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து கொண்டு சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களை கூடுதலாக பந்து வீச செய்ய வேண்டும். இதுவும் முடியவில்லை என்றால் ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களை போட்டியில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் பயன்படுத்த வேண்டும்.ஹர்திக் பாண்டியா மட்டும் இந்திய அணிக்காக மூன்று அல்லது நான்கு ஓவர்கள் வீசினால் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனை தீர்ந்துவிடும்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு பந்து வீச முடியாது. இதன் மூலம் இந்திய அணியின் ஒரு கை உடைந்து விட்டது போல் இருக்கின்றது. இந்த மூன்று வீரர்களில் யாருக்காவது பந்து வீச தெரிந்தால் அது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் டாப் வரிசையில் உள்ள பல வீரர்களுக்கு பந்து வீச தெரியும்.
இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் மோயின் அலி வில் ஜாக்ஸ், லிவிங் ஸ்டோன் போன்ற வீரர்களுக்கு பந்து வீச தெரியும். இதன் மூலம் பந்து வீசும் போது அவர்களுக்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். இதை வைத்து கேப்டன்கள் போட்டியை நகர்த்த முடியும். அந்த வகையில் பார்த்தால் இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு கை இல்லாதது போல் தான் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தியுள்ள சஞ்சய் மஞ்சுரேக்கர், இந்திய அணியில் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் இரண்டு அல்லது மூன்று ஓவர்களை வீச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக தான் சிவம் துபேவை பிளேயிங் லெவனில் இந்தியா கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.