மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து முக்கிய வீரரான பும்ராவும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா? என்ற சந்தேகம் இருந்தது. தற்போது பிசிசிஐ டி20க்கு மட்டும் தனி அணியை உருவாக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், பும்ரா இனி டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என கூறப்பட்டது.
2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்த போது அது குறித்து பும்ராவிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பும்ரா பதிலளித்தார் "எனது ஓய்வு இன்னும் நீண்ட தூரத்தில் உள்ளது. நான் இப்பொழுது தான் ஆரம்பித்து இருக்கிறேன். ஓய்வு பெறுவது என்பது மிகவும் அதிக தூரத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன்" என்று கூறினார். இதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

முன்னதாக இந்திய அணியின் தலைமை பேச்சாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவர் இந்திய டி20 அணிக்கான தனி அணியை உருவாக்க வேண்டும் என கூறி வருகிறார். அதன்படி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்ற நிலை உருவாகலாம்.
இந்த நிலையில் பும்ரா டெஸ்ட் அணியின் முக்கியமான வீரர் என்பதால் அவரை டி20 அணியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது பும்ரா தான் டி20 போட்டிகளில் ஓய்வு பெறப் போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார். தற்போது பும்ராவுக்கு 30 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 35 வயது வரை அவரால் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும். சமீபத்தில் டி20 போட்டிகளில் தங்களது ஓய்வை அறிவித்த விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தங்களின் 35 வது வயதில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
எனவே, பும்ராவும் நீண்ட காலம் டி20 அணியில் இடம் பெற முடியும். பும்ரா இல்லாமல் இந்திய அணியால் 2024 டி20 உலகக்கோப்பையை வென்று இருக்கவே முடியாது. ஒருவேளை இனி பும்ராவை டி20 அணியில் சேர்க்கக்கூடாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்தால் அது இந்திய அணிக்குத் தான் இழப்பாக இருக்கும்.