மும்பை : டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 4 வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் அனுபவ வீரர் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா, அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், சிவம் துபே உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் மாற்று வீரராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பரீசீலிக்கப்படாதது பலரையும் எரிச்சல் அடைய செய்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த், யார் வேண்டப்பட்டவர்களோ அவர்களை மட்டும் அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் கில் தடுமாறி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது.
இந்த சூழலில் கில்லை எவ்வாறு தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை அவர் டெஸ்ட் போட்டியிலும் சரியாக விளையாடாத நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதே போல் தான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கினார்கள். தற்போது டி20 கிரிக்கெட்டிலும் இப்படி செய்கிறார்கள். இப்படி தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அவர் 6000 ரன்கள் அடித்து விட்டால் பார்த்தீர்களா அடுத்த பெரிய கிரிக்கெட் வீரர் வந்து விட்டார் என்று பாராட்டுவார்கள்.
எனக்கு தேர்வு குழுவின் நடவடிக்கையை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது. ருதுராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த நிலையில் அவர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை. இதேபோன்று ரிங்கு சிங்கும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 22 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது ரிங்கு சிங் ஒரு முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியாவுக்காக அனைத்தையும் கொடுத்த பிறகு அவரை நீக்குவது சரியா? இது நிச்சயமாக குப்பையான முடிவு. வெஸ்ட் இண்டீஸ் நடைபெறும் தொடரில் எதற்கு நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை? யாரோ சிலரின் மனதை குஷிப்படுத்துவதற்காக இந்த தேர்வு நடந்திருக்கிறது. இதனால் ரிங்கு சிங்கை ஒரு பலியாடாக மாற்றி விட்டார்கள் என்று ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.