மும்பை : வரும் டி20 உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் சிஎஸ்கே வீரருமான மேத்தீவ் ஹைடன் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் வரும் ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்குகிறது.
இதில் முதல்முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மேத்தீவ் ஹைடன், சமநிலையுடன் இருக்கும் சிறந்த அணியாக இந்தியா விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அது நிச்சயம் நல்ல முடிவாக நான் கருதுகின்றேன். மேற்கிந்திய தீவுகள் ஆடுகளத்தில் நிச்சயம் சுழற் பந்து வீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை எனக்கு தெரியவில்லை. இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்கும்போது அனுபவமும் அதிரடியும் கலந்த தன்மை உடைய வீரர்களாக இருக்கிறார்கள்.
மேலும் வலது கை பேட்ஸ்மேன்கள், இடது கை பேட்ஸ்மேன்கள் ஆகியவர்கள் டாப் 3 யில் இருக்கிறார்கள். இது நிச்சயம் இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும். ரோகித் சர்மா தன்னை ஒரு தலைவராக ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இதுவரை பல தொடர்களில் அவர் வெற்றிகரமாக அணியை வழி நடத்தி வந்திருக்கிறார்.
இதேபோன்று பும்ரா, சிராஜ் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். அதை நிச்சயம் நல்ல தேர்வாக நான் கருதுகின்றேன். நடராஜன் போன்ற வீரர் இறுதிக்கட்டத்தில் இருந்திருந்தால் அது நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். அவர் ஐபிஎல் தொடரில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பேட்டிங் வரிசையை பார்த்தாலே உலகத்தரம் வாய்ந்த வித்தியாசமாக ஷாட்களை ஆடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.
சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் மற்ற வீரர்களுடன் வித்தியாசமாக விளையாடுவார்கள். இதேபோன்று ஜடேஜா,அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளனர். அதே சமயம் காகிதத்தில் நல்ல அணியை கொண்டிருந்தால் மட்டும் பத்தாது. உலக கோப்பையை வெல்ல வேண்டிய மன வலிமை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது.