நியூயார்க் : இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண சென்ற மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே மாரடைப்பால் நியூயார்க்கில் உயிரிழந்த சம்பவம் பிசிசிஐ நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக அமோல் காலே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அமோல் காலே, மகாராஷ்டிராவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் இருந்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் நண்பராகவும் இருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக அமோல் காலே அமெரிக்காவுக்கு பிசிசிஐ நிர்வாகிகளுடன் சென்றிருக்கிறார். அப்போது போட்டியை பி சி சி ஐ நிர்வாகிகளுடன் கண்டு ஹோட்டலுக்கு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
நாக்பூரை சேர்ந்த காலே பொறியியல் பட்டதாரி ஆவார். மும்பை கிரிக்கெட் சங்கத்தினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிசிசிஐ வழங்கும் ஊதியத்தின் அளவுக்கு இணையாக அமோல் வழங்கி வீரர்களின் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் வான்கடே மைதானத்தை புதுப்பித்து இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் மற்றும் 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். தற்போது அமோல் காலே எவ்வாறு உயிர் இழந்தார்? அவருடைய உடல் எப்போது கொண்டு வரப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அமோல் காலேவின் உயிரிழப்புக்கு ஜெய்ஷா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.