நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தற்போது அடுத்த சுற்றுக்கு செல்ல கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றது. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி யாருமே எதிர்பாராத வகையில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. இதேபோன்று இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்தியாவும், அயர்லாந்து அணியும் அமெரிக்க அணியை வீழ்த்த வேண்டும். அதேபோன்று பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும்.
இது நடந்தால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் செல்ல முடியும். இந்த நிலையில் மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று இந்தியா அமெரிக்கா மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.
ஒருவேளை இந்த ஆட்டம் மழையால் ரத்தாகி இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றால், அமெரிக்க அணி ஐந்து புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியாவுடன் தகுதி பெற்று விடும். இதேபோன்று பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள் ஃப்ளோரிடாவில் மோத இருக்கின்றது. ஆனால் புளோரிடாவில் வரும் வாரத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஃப்ளோரிடாவில் நடைபெறும் பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் ரத்தாக கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அயர்லாந்து போட்டியும் மழையால் ரத்தானால் பாகிஸ்தான் அணியால் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியாது. இதனால் இனிவரும் போட்டிகளில் மழை பெய்யக் கூடாது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.