மும்பை: 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு எடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா அதை சிறு குழந்தையை போல பார்த்துக் கொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக மும்பை விமான நிலையம் வந்த பிறகு ரோஹித் சர்மா, டி20 உலகக் கோப்பையை ரசிகர்களுக்கு தெரியும்படி தூக்கி காண்பித்தார்.
அதன் பின்பு அதை விமான நிலைய அறையில் வைத்து, அதன் மேல் இருந்த சிறிய தூசி மற்றும் கறைகளை நீக்கினார். ஒரு குழந்தையை சுத்தம் செய்வதை போல, "பூ மாதிரி" உலகக்கோப்பையை சுத்தம் செய்தார். அதை அருகில் நின்று பார்த்த காவலர்கள் முகத்தில் பெரும் வியப்பும், மகிழ்ச்சியும் இருந்தது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் தான் ஆடிய ஏழு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பை வென்று இருந்தது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் உலகக் கோப்பை இது. அதனால் ரோஹித் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.
உலகக் கோப்பை வென்று மூன்று நாட்கள் புயலின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ்-இலேயே இந்திய அணி தங்கியிருந்தது. பின்னர், அங்கிருந்து இந்தியா வந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியினர் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடினார்கள். முதலில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய அணி வீரர்கள், பின்னர் மும்பை வந்தனர்.
அங்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்த வெளி பேருந்தில் ரசிகர்கள் மத்தியில் பயணம் செய்தனர். வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதனிடையே தான் மும்பை விமான நிலையத்தில் உலகக் கோப்பை மீது படிந்திருந்த தூசியை சுத்தம் செய்தார் ரோஹித் சர்மா. இந்த உலகக் கோப்பை வெற்றி குறித்து அவர் பேசுகையில், "தனது கேப்டன்சியில் வென்றதால் இந்த உலகக் கோப்பை தனக்கு மிகவும் நெருக்கமானது" என்றார்.