மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆர்வம் தெரிவித்துள்ளதால், 4 இளம் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் என்பதால், யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் முடிவை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஏனென்றால் கடந்த டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தனர். அண்மையில் கூட தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயனத்தில் டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் விளையாடவில்லை.
இந்த நிலையில் தேர்வு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலிக்கான தேவை டி20 அணியில் இருந்தாலும், ரோகித் சர்மாவின் இடம் சில ஆண்டுகளுக்கு முன்பாக நிரப்பப்பட்டுவிட்டது.
ஏனென்றால் தொடக்க வீரராக கேஎல் ராகுல், சுப்மன் கில், இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் என்று 5 வீரர்கள் தொடக்க வீரர்களாக களமிறங்க தயாராக உள்ளனர். இதில் கேஎல் ராகுலை தவிர்த்து மற்ற 4 வீரர்களும் தொடர்ச்சியாக இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளாக டி20 அணியில் தொடக்கம் கொடுத்து வருகின்றனர்.
இரு இடதுகை பேட்ஸ்மேன், இரு வலதுகை பேட்ஸ்மேன் என்று சரியாக தொடக்க வீரர்களுக்கும் பிசிசிஐ மாற்று வீரர்களை கண்டறிந்துள்ளது. இதனால் ரோகித் சர்மா இனியும் டி20 கிரிக்கெட்டை விளையாடாமல் இளம் வீரர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலகக்கோப்பை தோல்வியில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பையில் தோல்வியடைந்தால், விமர்சனங்களும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.