மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கும் விராட் கோலி நடப்பு தொடரில் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி 10 ரன்களை கூட தாண்டி இருக்க மாட்டார்.
இன்னும் சொல்லப் போனால் மொத்தமாகவே இரண்டு போட்டிகளில் அவர் ஐந்து ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி இடம் இருக்கும் பிரச்சனை என்ன என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், விராட் கோலியிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதுதான் தற்போது அவரது சரிவுக்கு காரணமாக இருந்திருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. அதற்கெல்லாம் அவர் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தனது பேட் மூலம் பதிலடி கொடுத்தார். கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 150 ஐ தாண்டி சென்று விட்டது. இந்த நிலையில் அதே மனநிலையில் தான் விராட் கோலி டி 20 உலக கோப்பை தொடருக்கும் வந்திருப்பார்.
ஆனால் இங்கு இருக்கும் ஆடுகளம் மெதுவாக விளையாடினால் மட்டுமே ரன்கள் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடுகளத்திற்கு பழைய விராட் கோலி தான் நல்ல தேர்வாக இருப்பார். எனவே யாராவது விராட் கோலியிடம் சென்று நீங்கள் பழைய விராட் கோலி போல் முதலில் மெதுவாக ஆடி பிறகு அதிரடி காட்டுங்கள் என்று சொல்ல வேண்டும்.
ஒட்டுமொத்த ஊடகமும் விராட் கோலி, ரோகித் சர்மாவை தான் பின் தொடர்ந்து வருகிறது. ஆனால் பும்ரா தான் சத்தமே இல்லாமல் தனி ஆளாக இந்தியாவுக்கு வெற்றியை பெற்று வருவதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் பாராட்டியுள்ளார். அமெரிக்கா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தொடக்க வீரராக தான் களமிறங்குவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கோலி தள்ளப்பட்டு இருக்கிறார்.