மும்பை : விராட் கோலி மட்டும் இந்த விஷயத்தை செய்யவில்லை என்றால் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருந்தார்.
அந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார். இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி எந்த இடத்தில் விளையாட போகிறார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

விராட் கோலியை தொடக்க இடத்தில்தான் களம் இறக்க வேண்டும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் விராட் கோலி ஆங்கர் ரோல் மற்றும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை நிலை நிறுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய ஹைடன், விராட் கோலி தொடக்க வீரராக விளையாடவில்லை என்றால் அவரை அணியிலே சேர்க்கக்கூடாது என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் டி20 அணியில் எப்போதுமே வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். டாப் 5 பேட்டிங் வரிசையில் மொத்தமாகவே வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது போல் நீங்கள் அணியை தேர்வு செய்தால் அது எதிரணிக்கு தான் சாதகமாக அமையும். ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஆடம் சாம்பாவை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து விடும்.
இதனால் விராட் கோலி தொடக்க வீரராக நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் ஜெயஸ்வாலுடன் களம் இறங்க வேண்டும். மேலும் ரோகித் சர்மா எந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும், அவர் அதிரடியை காட்டுவார். இதனால் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவை நடு வரிசையில் களம் இறக்க வேண்டும்.
தொடக்கத்தில் விட நான்காவது வீரராக ரோகித் சர்மா களமிறங்கிய போது தான் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார். இதனால் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எனினும் ஹைடனின் இந்த கருத்துக்கு ரெய்னா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் விராட் கோலி எப்போதுமே நம்பர் மூன்றாவது வீரராக தான் களமிறங்கி விளையாடி இருக்கிறார்.
அந்த இடத்தில் அதிக ரன்கள் குவித்திருக்கிறார். அவர் இந்திய அணியின் ரன் மிஷின். ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர்தான் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். என்னை கேட்டால் அமெரிக்க ஆடுகளங்கள் போட்டி நடக்க நடக்க தோய்வாகும் என நினைக்கின்றேன். இதனால் கோலிக்கு மூன்றாம் இடம் தான் சரி வரும் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.