நியூயார்க் : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக சர்வதேச t20 உலக கோப்பை நடைபெறுகிறது.
இதில் நியூயார்க் புறநகரில் உள்ள நாசாவு கவுண்டி என்ற இடத்தில் தற்காலிக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று ஐசிசி அறிவித்தது. எனினும் எப்படி இரண்டு மாதத்தில் ஒரு மைதானத்தை உருவாக்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சர்வதேச தரத்தில் உள்ள மைதானத்தை இரண்டே மாதத்தில் உயர்தர தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க நாட்டினர் இதை கட்டி முடித்திருக்கிறார்கள். தற்போது இந்த மைதானத்தின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் 34,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய, இந்த மைதானத்தில் மொத்தம் எட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய இந்தியா, பாகிஸ்தான் போட்டியும் நடைபெறுகிறது. மேலும் டிராப் இன் வகை செயற்கை ஆடுகளத்தை, இந்த கிரிக்கெட் மைதானத்தில் அமைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் புற்களும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

டி20 உலக கோப்பை இயங்குவதற்குள் இந்த மைதானத்தை தயார் செய்ய முடியாது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அமெரிக்கர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரண்டு நாட்டிலும் இணைந்து 9 மைதானங்களில் இந்த டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. நியூயார்க்கில் நடைபெறும் போட்டியின் விவரத்தை தற்போது நாம் பார்க்கலாம். ஜூன் மூன்றாம் தேதி இலங்கையும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடுகிறது.
ஜூன் 5ஆம் தேதி இந்தியாவும் அயர்லாந்தும் இந்த மைதானத்தில் விளையாடுகின்றது. ஜூன் 7-ம் தேதி நெதர்லாந்தும் தென்னாப்பிரிக்காவும் பலபரீச்சை நடத்துகின்றது. உலகமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்த மைதானத்தில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவும், வங்கதேசமும், ஜூன் 11ஆம் தேதி பாகிஸ்தானும் கனடாவும், ஜூன் 12-ம் தேதி இந்தியாவும் அமெரிக்காவும் இந்த மைதானத்தில் பல பரிட்சை காண்கின்றன.