டெல்லி: 2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் இந்த மெகா தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் ஒன்று மும்பை வான்கடே மைதானத்திலும், தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையைப் போலவே, இந்த முறையும் தொடக்க விழா மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் அகமதாபாத் மைதானம் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை அகமதாபாத் தவிர்த்து வேறு மைதானத்தில் நடத்தி இருந்தால் இந்தியா வெற்றி இருக்கும் என்ற கருத்து அப்போது நிலவியது.
அப்படி இருந்தும் இந்த முறையும் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நடத்த அகமதாபாத் மைதானம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்திய டி20 அணி அதிக அளவில் வெற்றிகளை குவித்து உலகக்கோப்பையில் விளையாட உள்ளது. அந்த வகையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ள இந்திய அணி, மீண்டும் அகமதாபாத்தில் ஒரு இறுதிப் போட்டியில் விளையாட வேண்டி வருமோ? என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

இருபது அணிகள் பங்கேற்கும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் போட்டிகளை நடத்த மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய ஐந்து முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் கொழும்பில் உள்ள இரண்டு மைதானங்கள் மற்றும் கண்டி ஆகிய மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐசிசி இணைந்து இந்த முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு மைதானத்திற்கும் குறைந்தது ஆறு போட்டிகளையாவது ஒதுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நடைபெற்றால், அந்த ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், மற்றொரு அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.
மேலும், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்த இறுதிப் போட்டியும் இந்தியாவிற்கு வெளியே, கொழும்பில்தான் நடத்தப்படும் என்று ஐசிசி, பிசிசிஐ-யிடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல், இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், அவர்களது அரையிறுதி ஆட்டமும் கொழும்பிலேயே நடைபெறும்.
இந்திய அணி தனது லீக் சுற்றுப் போட்டிகளை மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டங்களை பெங்களூருவில் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடருக்கான அதிகாரப்பூர்வ முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வரும் நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.