மும்பை: பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கோப்பையைத் தக்கவைக்க இந்திய அணிக்குத் தான் அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அதே சமயம், 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, இந்திய அணிக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது உச்சகட்ட ஃபார்மில் உள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்திய அணி ஒரு டி20 தொடரைக்கூட இழக்கவில்லை. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூட்டணியில் இந்திய அணி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய ராகுல் டிராவிட், "கடந்த சில ஆண்டுகளாக இந்திய டி20 அணி 80 சதவீத வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. இந்த உலகக்கோப்பையில் இந்தியா தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் கொண்ட அணி என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்" என்று பாராட்டினார்.
அதேசமயம், கடந்த கால வலியை நினைவுபடுத்திய அவர், "ஆனால், நான் எனது கசப்பான ஏமாற்றத்திலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நாம் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றோம்.
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாகச் செயல்படுகிறதோ, அவர்களே வெற்றி பெறுவார்கள். எதிரணியில் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடினாலே ஆட்டத்தின் முடிவு மாறிவிடும். ஒரு மோசமான நாள், அதுவரை நாம் செய்த சாதனைகளை வீணாக்கிவிடும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று டிராவிட் எச்சரித்துள்ளார்.
இந்திய அணியின் இந்த அதிரடி மாற்றத்திற்கு ரோஹித் சர்மா தான் காரணம் என்றும் டிராவிட் புகழ்ந்துள்ளார். "2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு, நாம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பின்தங்கி இருப்பதை உணர்ந்தோம். அப்போது கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா தான் அணியின் போக்கை மாற்றினார்.
தனது சராசரி ரன்களைப் பற்றிக் கவலைப்படாமல், முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினார். ஒரு கேப்டனே இப்படித் தனது சொந்த சாதனைகளைப் பொருட்படுத்தாமல் ஆடியது, மற்ற வீரர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்தது. அதுவே இன்றைய இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது" என்று ராகுல் டிராவிட் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.