லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்த நிலையில், அந்தப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்திருக்கலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் தேவையற்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அந்த அணி அடுத்ததாக இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் செய்த ஒரு மாற்றம் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், சிறப்பான ஃபார்மில் இருப்பவருமான அகீல் ஹுசைனை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ரோஸ்டன் சேஸை அணியில் சேர்த்தனர். இந்த முடிவு அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. தென்னாப்பிரிக்க பேட்டர்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு 17 ஓவர்களுக்குள்ளாகவே வெற்றி இலக்கை எட்டினர்.
இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாட்டின் மீது கடும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வதற்கு வழிவிடும் வகையில் இந்தப் போட்டியில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாமோ என்று அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சக்லைன் முஷ்டாக் பேசுகையில், "வெஸ்ட் இண்டீஸ் அணி திடீரெனத் தனது திட்டங்கள் அனைத்தையும் மாற்றிக்கொண்டது. அகீல் ஹுசைனை பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு ரோஸ்டன் சேஸை உள்ளே கொண்டு வந்தார்கள். அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகவும் சாதாரணமாகப் பந்துவீசினர்.
சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய அதே வெஸ்ட் இண்டீஸ் அணிதானா இது என்று சந்தேகம் வருகிறது. ஜிம்பாப்வேயை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த வேகம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் துளியும் இல்லை. அவர்கள் விளையாடிய விதம் ஏதோ சரியில்லாதது போலவே தோன்றுகிறது" என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தால், இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய தோல்வியைச் சந்தித்ததால், இந்திய அணியின் அரையிறுதிப் பாதை சற்று எளிதாகியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தினால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும். இந்தச் சூழலில்தான் சக்லைன் முஷ்டாக் மேட்ச் பிக்சிங் புகாரைக் கிளப்பியுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ரொமாரியோ ஷெப்பர்டு மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 176 ரன்களை எட்டியது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. எய்டன் மார்க்ரம் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்க வேண்டும் என நினைத்து இருந்தால் 83 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்து 100 முதல் 120 ரன்களுக்குள் சுருண்டு இருக்கலாம். பேட்டிங்கில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுக்கு 83 ரன் என்ற நிலையில் இருந்து போராடி 176 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதை எல்லாம் யோசிக்காமல் வழக்கம் போல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிதற்றி வருகின்றனர்.