மும்பை: 2026 டி20 உலககோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த சூழலில் தற்போதைய இந்திய அணியை விட, ரோகித் சர்மா தலைமையிலான 2024 டி20 உலககோப்பை வென்ற இந்திய அணியே மேண்மையானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்று, ஐசிசி கோப்பைக்கான 11 வருட காத்திருப்பை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்தது. தென் ஆப்பிரிக்காவை பரபரப்பான இறுதிப் போட்டியில் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நெருக்கடியான தருணங்களில் அனுபவத்தையும், நிதானத்தையும் அளித்து முக்கியப் பங்காற்றினர்.

இந்த வெற்றிக்குப் பிறகு, மூவரும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இது இந்திய டி20 கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறித்தது. அவர்களின் ஓய்வுக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்று, அவரது தலைமையில் இந்திய அணி டி20 தொடர்களில் தோல்வியின்றி சிறப்பாக விளையாடி வருகிறது.
இது குறித்து பேசிய கும்ப்ளே "அனுபவம் பற்றி பேசினால், விராட் மற்றும் ரோஹித் என்ற இரண்டு ஜாம்பவான்களை அணி இழக்கும். ஆனால், சமநிலையை பற்றி பேசினால், சூர்யகுமார் தலைமையிலான அணியும் பலமானதாகவே உணர்கிறேன். ஏனெனில் பந்துவீச்சு ஆப்சன்கள் நிறைய உள்ளன, மேலும் பேட்டிங்கின் அதிரடி அணுகுமுறையும் பலமாக மாறிவிட்டது" என்றார்.
"எனினும், இது சவாலாகவே இருக்கும். 2024-ஆம் ஆண்டு நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. 2024 அணியை இந்த அணியை விட 10 சதவீதம் முன்னணியில் வைப்பேன் என்றாலும், இந்த அணியும் அதற்கு மிக நெருக்கமாக இருப்பதாகவே உணர்கிறேன்" என்றார்.
2024 டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் கோலியும், அக்ஸர் படேலும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஆடியதை குறிப்பிட்ட கும்ப்ளே, 2026-லும் இதேபோன்ற செயல்பாடுகள் தேவை என்றார்.மேலும், "சூர்யா (சூர்யகுமார் யாதவ்) போன்ற ஒருவர் மிக முக்கியமானவராக இருப்பார். அவரது ஃபார்ம் முக்கியமானதாக இருக்கும், ஆனால் அந்த நெருக்கடியான தருணங்களை இந்தியா வெல்வதையும் அவர் உறுதி செய்ய வேண்டும்" என கும்ப்ளே வலியுறுத்தினார்.