கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பிறகும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஐந்து நாட்களாகச் சொந்த நாடு திரும்ப முடியாமல் கொல்கத்தாவிலேயே தவித்து வருகின்றனர். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் காரணமாகச் சர்வதேச வான்வெளிப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வீரர்களின் பயணம் தடைபட்டுள்ளது. அதேவேளையில், தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் மட்டும் நியூசிலாந்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. போட்டி முடிந்து வீரர்கள் கிளம்பத் தயாராக இருந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த ஐந்து நாட்களாக வீரர்கள் கொல்கத்தா ஓட்டலிலேயே முடங்கியுள்ளனர்.
வீரர்களை அழைத்துச் செல்லத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறையின் இறுதி அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர். இது குறித்துப் பேசிய வங்காள கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர், "வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் பயணம் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வரவில்லை" என்று தெரிவித்தார்.

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணியின் நிலைமையும் இதேதான். அவர்களும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும், அந்த அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் மட்டும் நியூசிலாந்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். வருகிற மார்ச் 15ஆம் தேதி முதல் நியூசிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக நான்கு வீரர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை இரவே கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் எப்போது செல்வார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, "நான் வீட்டுக்குப் போக வேண்டும்" என்று சமூக வலைத்தளத்தில் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஐசிசி உடன் இணைந்து மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தது. வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வாரியம் விளக்கம் அளித்தது.

இந்தத் தாமதம் ஒருபுறம் இருக்க, சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடருக்காகப் பயணத்தைத் தவிர்த்து இந்தியாவிலேயே தங்க வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள ரோவ்மன் பாவல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹெட்மையர் மற்றும் பெங்களூரு அணியின் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அந்தந்த அணிகளின் பயிற்சி முகாமில் இணைய வாய்ப்புள்ளது. இதற்கிடையில், இதே காரணத்தினால் சிக்கியிருந்த ஜிம்பாப்வே வீரர்கள் எத்தியோப்பியா வழியாக சொந்த நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.