மும்பை : 2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்து இருக்கிறது.இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து சஞ்சு சாம்சன் வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன் நான் அணியில் விளையாட போகிறேன் என்றும் இதற்காக தயாராக இருங்கள் என்றும் அணி நிர்வாகம் கூறியது. இதனால் இறுதிப்போட்டியில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியில் நான் இருந்தேன். ஆனால் டாஸ் வீசுவதற்கு முன்பு ரோகித் சர்மா என்னிடம் வந்து நாங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதனால் இறுதிப்போட்டியில் நீ இடம்பெறப் போவதில்லை என்று கூறினார். உடனே நான் எனக்கு இதில் எந்த கவலையும் இல்லை. இது எனக்கு பழகிய ஒன்றுதான். இதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். போட்டியை வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துங்கள் என்று நான் கூறினேன். ஆனால் ரோகித் சர்மா என்னை விடவே இல்லை. மீண்டும் ஒரு நிமிடத்திற்கு பிறகு வந்து நீ என்னை திட்டிக் கொண்டு தானே இருக்கிறாய்.
நீ மகிழ்ச்சியாக இல்லை. உன் மனதில் ஏதோ இருப்பதை நான் உணர்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார். அதற்கு நான் சிறுவயதிலிருந்து உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் அணிக்கு எது தேவையோ அதை நீங்கள் செய்யுங்கள். அதில் எனக்கு முழு மரியாதை இருக்கிறது.
உங்களை போல ஒரு கேப்டன் கீழ் இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை என்ற வருத்தம் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று பதிலளித்தேன் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல் அணியின் தேர்வு செய்யப்படாத எனக்கு பத்து நிமிடம் வரை ஒதுக்கி ரோகித் சர்மா ஆறுதல் கூறியது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ரோகித் சர்மாவிடம் நல்ல குணங்கள் இருந்ததை நான் அன்று உணர்ந்தேன் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.