மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 253 ரன்கள் குவித்தும் கடைசி வரை வெற்றிக்காகப் போராட வேண்டியிருந்த இந்த ஆட்டத்தில், கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா வீசிய அந்த மூன்று ஓவர்களே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரைப் பதிவு செய்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், ரன் வேகம் குறையவில்லை. குறிப்பாக அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
அவர் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது, தனி ஆளாக நின்று இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்துவிடுவாரோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அப்போது ஆட்டத்தின் கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

இந்த இக்கட்டான சூழலில் பந்துவீச வந்த ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 16வது ஓவரை வீசிய அவர், வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த 17வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 16 ரன்களை வாரி வழங்கியது இந்திய அணிக்கு மீண்டும் சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.
இருப்பினும், நம்பிக்கையுடன் 18வது ஓவரை மீண்டும் வீசிய பும்ரா, அந்த ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். செட் ஆகி இருந்த பேட்ஸ்மேன்களால் கூட பும்ராவின் பந்துவீச்சில் ரன் குவிக்க முடியவில்லை. இதனால் கடைசி 12 பந்துகளில் இங்கிலாந்து வெற்றி பெற 39 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை உருவானது.

மிகவும் முக்கியமான 19வது ஓவரை வீசும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இது இங்கிலாந்து அணியின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியால் 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வந்த வேளையில், கடைசி கட்டத்தில் பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்தி வீசியதே இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.