“இனி வேற வழியே இல்ல”.. இன்று டி20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு.. முகமது ஷமிக்காக பிசிசிஐ முக்கிய முடிவு
துபாய்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியிருந்தது.

இந்திய அணி
அந்தவகையில் இந்திய அணியை உருவாக்கும் பணிகளில் பிசிசிஐ களமிறங்கிவிட்டது. இந்த அணி தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரம் நடைபெறவுள்ள ஆலோசனையில், ஆசிய கோப்பையில் செய்த தவறை போன்று இல்லாமல் கவனத்துடன் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது ஷமி கம்பேக்
இந்நிலையில் இந்த அணியில் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம்பெறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் புவனேஷ்வர் குமாருடன் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என அனுபவமில்லாத வீரர்கள் மட்டுமே சென்று சொதப்பினர். எனவே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நிச்சயம் முகமது ஷமி தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது.

காரணம் என்ன
காயத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டனர். புவனேஷ்வர் குமாரும் அட்டகாசமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முகமது ஷமியும் இணைந்தால் இந்தியாவின் பவுலிங் படை அசுர பலத்தை பெற்றுவிடும். பேக் அப் வீரர்களாக தீபக் சஹார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள்.

பயிற்சி ஏற்பாடுகள்
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான டி20 தொடர்களில் பங்கேற்கிறது. இதற்கான அணி அறிவிப்பும் இன்றே இருக்கும். எனவே இந்த இரண்டு தொடர்களிலும் முகமது ஷமியை விளையாட வைத்து தயார் செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications