TNPL 2021: அட்றா... அட்றா.. போட்டிகள் இன்று முதல் தொடக்கம் - முதல் மேட்சே "சரவெடி"
சென்னை: TNPL என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது.
Recommended Video
ஐபிஎல் லீக் போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
2016ம் ஆண்டு இத்தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக TNPL தொடர் நடத்தப்படவில்லை.

சேப்பாக் ஸ்டேடியத்தில்
இந்த வருடமும் ஜூன் மாதம் டிஎன்பிஎல் தொடர் நடைபெறவிருந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்தநிலையில், டிஎன்பிஎல் தொடர் இன்று ஜூன்.19 முதல் தொடங்க உள்ளது. இந்த 5-வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆஃப்கள், 1 ஃபைனல் என மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ளன. கோவிட் காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு அணிகள்
இத்தொடரில், சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies), லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings), திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors), திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans), மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers) மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings) என்று எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இரவு 7.30 மணிக்கு
2016ல் தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஒரேயொரு ஆட்டம் நடைபெறும் நாளில் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதேபோல இரண்டு போட்டிகள் நடைபெறும் நாளில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், அடுத்த போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

முதல் போட்டி
இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings) மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans) அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்குகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications