கோவை: ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீரர் ஜெகதீசன் 155 ரன்கள் எடுத்து களத்தில் இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. இதுவரை அனைத்து அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. அதில் தமிழ்நாடு அணி ஆடிய முதல் போட்டியில் குஜராத் அணியிடம் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், திரிபுரா அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது ரஞ்சி போட்டியில் ரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியுள்ளது. கோவை மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய ஏ அணிக்கு விளையாட சாய் சுதர்சன் தமிழ்நாடு அணியில் இருந்து விலகியதால், விமால் குமார் சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அணி தரப்பில் விமல் குமார் - ஜெகதீசன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதேபோல் ரயில்வே அணி தரப்பில் யுவராஜ் சிங் வீசிய முதல் ஓவரிலேயே விமால் குமார் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சச்சின், ஜெகதீசனுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
நிதானமாக ஆடிய சச்சின் 33 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பாபா இந்திரஜித் 18 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் அரைசதம் கடக்க, விஜய் சங்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஜெகதீசன் - பூபதி குமார் இருவரும் இணைந்து தமிழ்நாடு அணியை மீட்டனர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெகதீசன் சதம் அடித்து அசத்த, தமிழ்நாடு அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இன்னொரு பக்கம் பூபதி குமார் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த ஜெகதீசன் 3 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 155 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை சேர்த்தது. சொந்த மண்ணில் களமிறங்கிய தமிழக வீரர் ஜெகதீசன் சதம் அடித்து தமிழ்நாடு அணியை மீட்டுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.