டாக்கா : வங்கதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று வெடித்திருக்கிறது. உலகக்கோப்பை தொடர் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் அனுபவ வீரர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமீம் இக்பால், கண்ணீர் விட்டு அழுதார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

16 ஆண்டுகளாக வங்கதேச அணிக்காக விளையாடும் தமிழ் இக்பால் 241 ஒருநாள் போட்டிகள் விளையாடி 8313 ரன்கள் அடித்திருக்கிறார். வங்கதேசத்துக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த முதல் வங்கதேச வீரர் என்று பெருமையை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 வயதில் தமீம் இக்பால் திடீரென்று இந்த முடிவை எடுத்தார்.
இதற்கு காரணம் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நசீம் அளித்த பேட்டி தான் என்று கூறப்படுகிறது. தமீம் இக்பால் காயத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். அப்போது தான் காயமாக இருப்பதாகவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிவிட்டு தன்னுடைய காயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தான் தெரிந்து கொள்வேன் என்றும் தமீம் இக்பால் கூறியிருந்தார். தமீம் இக்பாலின் இந்த பேச்சுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர், நசீம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு கேப்டனாக இருந்து கொண்டு இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்று அவர் கேட்டிருந்தார். இதனால் கடுப்பான தமீம் இக்பால், கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இந்த பஞ்சாயத்து தற்போது வங்கதேச பிரதமர் சேக் அசினா வரை சென்றது.
இதனை அடுத்து நசீம் மற்றும் தமீம் இக்பாலை அழைத்து பேசிய சேக் ஹசீனா, ஓய்வு முடிவில் இருந்து திரும்பி வருமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதனை அடுத்து தமீம் இக்பால் தன்னுடைய ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.