மும்பை : உலகத்திற்கே அரசன் என்றாலும் தாய்க்கு எப்போதுமே மகன், மகன் தான். அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை வென்று வந்த ரோகித் சர்மாவை அவரின் தாய் அனைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோர் எனக் கேட்ட தாய் என்ற திருக்குறளுக்கு ஏற்ப இன்று ரோகித் சர்மா படைத்த சாதனையை நினைத்து அவருடைய தாய் பெருமிதமாக உணர்ந்தார்.
ஒவ்வொரு குழந்தைக்குமே தங்களுடைய பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும். நல்ல பெயரை வாங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. சிலர் அதற்கான முயற்சியையும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலரால்தான் அந்த வெற்றியை பெற முடியும்.

அப்படித்தான் ரோஹித் சர்மா இந்தியாவின் 17 ஆண்டு கால போராட்டத்திற்கு ஒரு முடிவை கொடுத்திருக்கிறார். தோனிக்குப் பிறகு இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடியாது என்ற நிலையை ரோகித் சர்மா இன்று அடித்து உடைத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
மேலும் சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தது, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. விராட் கோலியால் கேப்டனாக செய்ய முடியாததை ரோகித் சர்மா செய்து காட்டி விட்டார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா தாய் தந்தை அவருக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோகித் சர்மா வந்தவுடன் திடீரென்று அவரது தாய் அவரை கட்டி அனைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் கன்னத்தில் முத்தமிட்டு பிறகு நெத்தியிலும் ரோகித் சர்மாவுக்கு அவரது தாய் முத்தமிட்டார். இதை அடுத்து கூட்டம் அங்கு கூடவே ரோகித் சர்மா தன்னுடைய தாயை பத்திரமாக அழைத்து சென்றார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.