மும்பை: பெரிய நிறுவனங்கள், விளையாட்டு வீரர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர்.
மும்பை காவல்துறை கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, சச்சின் இவ்வாறு தெரிவித்தார்.

மும்பை கிரிக்கெட் சங்க அணியில் முன்பு குறைந்த அளவிலான வீரர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் இருந்தனர். இப்போது, நிலைமை மாறியுள்ளது. எனவே வீரர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இந்தக் காலத்தில், விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதார உத்தரவாத்தை அளிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. பள்ளி அளவிலான அணிகளில் 14 வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற எனது ஆலோசனையை மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்றிருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் அதிகம் கொண்ட தேசம் நம்முடையது. எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கையை ஒவ்வொரு உள்ளூர் அணியுமே குறைத்துக்கொள்கிறது. இதனால் அந்த வீரர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களிலும், பன்னாட்டு எம்.என்.சி. நிறுவனங்களிலும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு அவசியமான பொருளாதார உத்தரவாதத்தை கொடுக்க முடியும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.