இந்தியா படுதோல்வி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இமாலய இலக்கை எட்டி பிடிக்க முயன்ற இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இல்லாத குறை தெளிவாக தெரிந்தது. மேலும், இஷாந்த் சர்மா, நவதீப் சைனி ஆகியோரும் காயம் அடைந்திருந்தனர்.
குழப்பமாக உள்ளது
ஆனால் வீரர்களின் காயம் குறித்த அறிவிப்பில் பிசிசிஐ மிகவும் குழப்பம் அடைந்திருப்பதாக தெரிகிறது. முதல் போட்டிக்கு முன்னதாக இதை கேப்டன் கோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிசிசிஐயின் செயல்பாடுகள் குறித்து அவர் அதிருப்தியில் இருப்பதையே இது புலப்படுத்துகிறது.
தெளிவில்லை
இது குறித்து அவர் கூறுகையில், காயம் காரணமாக ரோகித் சர்மா இந்த தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என முதலில் தேர்வுக் குழுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டார். எனவே, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு எங்களுடன் ஒன்றாக விமானத்தில் பயணிப்பார் என்று அனைவரும் நினைத்திருந்தோம். அவர் ஏன் எங்களுடன் பயணம் செய்யவில்லை என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தெளிவின்மை தான் உள்ளது என்று கோலி தெரிவித்தார்.
பிசிசிஐ சொல்வது என்ன
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பிசிசிஐ வெளியிட்ட மின்னஞ்சலில், தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ரோஹித் சர்மா ஐ.பி.எல். க்கு பிறகு மும்பைக்கு திரும்ப வேண்டியிருந்தது. அவரது தந்தை குணமடைந்து வருவதால் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி பெறுகிறார்.
பங்கேற்பாரா
அவரின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11 ஆம் தேதி மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது குறித்து பிசிசிஐ தெளிவுபடுத்தும் எனக் கூறியது. இந்த நிலை இந்திய கேப்டனுக்கும், பிசிசிஐ, தேர்வு குழு உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இல்லாததை காட்டுகிறது.
ஏன் செல்லவில்லை
இதே போல் இஷாந்த் சர்மா காயம் குறித்து முன்னதாக தகவல் தெரிவித்த பிசிசிஐ, ஐபிஎல் காயத்திலிருந்து இஷாந்த் முழுமையாக குணமடைந்துள்ளார் என கூறியது, ஆனாலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை, மூன்றாவது, நான்காவது டெஸ்ட்டில் விளையாடுவாரா என்ற தகவல் ஏதும் தெரிவிக்கவிலை.
கடைசி கட்ட அறிவிப்பு
இதேபோல் நவ்தீப் சைனி காயம் அடைந்து விட்டதால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் முதல் போட்டியில் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ கடைசி நேரத்தில் அறிவித்தது. ஆனால் நேற்று அவரை விராட் கோலி அணியில் சேர்க்கவில்லை. மாறாக சைனியையே விளைாட விட்டார்.
ஆக மொத்தத்தில் வீரர்களின் காயத்தில் பிசிசிஐ ஒரு தெளிவான முடிவு இல்லாமல், அறிவிப்பு இல்லாமல் செயல்படுவதாக தெரிகிறது. கூடவே கோலியின் குழப்பமும் புலப்படுகிறது.