தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல்
ஐபிஎல் 2021 தொடர் இன்றைய தினம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகிகள் குழு மற்றும் பிசிசிஐ உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 4 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
பிசிசிஐயின் கடினமான முடிவு
கொரோனா பாதிப்பையடுத்து ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது அந்த கடினமான முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. பணம் கொழிக்கும் இந்த போட்டியை விட்டுக் கொடுக்க பிசிசிஐயால் முடியவில்லை. மாறாக மீண்டும் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.
சிக்கிய வெளிநாட்டு வீரர்கள்
இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிசிசிஐ முன்னால் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இந்தியாவில் ஐபிஎல் விளையாடவந்து தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமல் இங்கு சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அவர்கள் நாட்டு அனுப்புவதுதான்.
பாதுகாப்பாக அனுப்புவோம்
இதனிடையே, தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களை அனுமதிக்க மறுப்பு
இந்தியாவில் இருந்து வரும் வீரர்களை அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ள நிலையில், 10 நாட்கள் குவாரன்டைனுடன் வீரர்களை அனுமதி பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது. இதேபோல நியூசிலாந்து வீரர்கள் 14 நாட்கள் குவாரன்டைனுடனும் வங்கதேசத்தில் தரைவழியான அனுமதி மற்றும் 14 நாட்கள் குவாரன்டைன் என ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளுடன் வீரர்களை மீண்டும் நாடு திரும்ப அனுமதி அளித்துள்ளது.
தற்போது நடத்தப்பட வாய்ப்பில்லை
ஐபிஎல் போட்டிகள் உடனடியாக நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக செப்டம்பரில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்களை அவரவர் நாடுகளின் கொரோனா விதிமுறைகளுக்கு ஏற்ப வரும் நாட்களில் பிசிசிஐ அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.